20 தொகுதிகளில் மோசடி புகார்கள் – அரியானா பாஜக ஆட்சி தகுதியிழப்பு?

அரியானாவில் ஒரே கட்டமாகவும் (அக்டோபர் 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அக்டோபர் 8 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நிச்சய வெற்றி என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரசுக் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்தத் தேர்தல் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரசுத் தலைவர்கள் தெரிவித்தனர்.மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது பல முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரசு வேட்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினர்.

இதுதொடர்பாக காங்கிரசு மேலிடத் தலைவர்களைக் கொண்ட குழு கடந்த 9 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் 7 புகார்களை கொடுத்தது.

அதில்,அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பல வாக்கு இயந்திரங்களில் 99 சதவீத பேட்டரி சார்ஜ் இருப்பதை எங்கள் கட்சி வேட்பாளர்கள் கவனித்துள்ளனர். நாள் முழுவதும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் இவிஎம் இயந்திரங்கள் பின்னர் சீலிடப்பட்டு பாதுகாப்பு அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின் அந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் நாளில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு ஆன் செய்யப்படும்.நாள் முழுவதும் வாக்குப்பதிவு நடந்த இயந்திரங்களில் பொதுவாக 60 அல்லது 70 சதவீத பேட்டரி மட்டுமே சார்ஜில் இருக்கும். 99% பேட்டரி சார்ஜ் இருப்பது சாத்தியமற்றது எனக் கூறியிருந்தனர்.

எனவே, வாக்குப்பதிவு நாளில் கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் மாற்றப்பட்டு தில்லுமுல்லு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், மேலும் 13 தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரசு வேட்பாளர்கள் தற்போது தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அதிலும், வாக்கு இயந்திரங்கள் 99 சதவீத சார்ஜூடன் இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மொத்தம் 20 தொகுதிகளின் இவிஎம் முரண்பாடு குறித்து புகாரளிக்கப்பட்டிருப்பதாகவும், இதை தேர்தல் ஆணையம் விரைவில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நம்புவதாகவும் காங்கிரசு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரசு தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில்,

இராகுல் காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் கடந்த சில நாட்களாக அரியானா மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.எங்கள் கட்சி நிர்வாகிகளிடம்,பூத் வாரியான அறிக்கையைக் கேட்டுள்ளோம். இதன் மூலம் மேலும் எங்கெங்கெல்லாம் மோசடி நடந்திருக்கிறது என்பதை அறிய முடியும். தீர ஆலோசனை நடத்தியபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்.

அரியானா தேர்தலில் பல காங்கிரசு வேட்பாளர்கள் மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாகப் புகாரளித்தவர்களில் ஒருவரான அரியானா மாநில காங்கிரசு தலைவர் உதய் பான் கூறுகையில், பல இயந்திரங்கள் 80 முதல் 90 சதவீத சார்ஜூடன் இருந்தன.எனவே இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாளில் மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.மேலும், அதிக சார்ஜ் உள்ள இயந்திரங்களில் பாஜவுக்கு அதிக எண்ணிக்கையிலான வாக்கு கிடைத்துள்ளது.மேலும் 70க்கும் குறைவான சார்ஜ் இருந்த இயந்திரங்களில் காங்கிரசு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.இது எங்கள் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது என்றார்.

காங்கிரசு மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் இதுகுறித்துக் கூறுகையில்,அரியானாவில் தபால் வாக்கு எண்ணிய போது, 90 இடங்களில் 76 இல் காங்கிரசு முன்னிலை பெற்றிருந்தது. இவிஎம் வாக்கு எண்ணத் தொடங்கியதும் நிலைமை மாறியது. இதே போல கடந்த ஆண்டு நவம்பரில் மத்தியபிரதேசத்தில் நடந்த தேர்தலிலும் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் 230 இல் 199 தொகுதிகளில் காங்கிரசு முன்னிலை பெற்றிருந்தது. இவிஎம் இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியதும் பாஜக முன்னிலை பெற்றது. எனவே மபியிலும் இவிஎம் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.

இது தொடர்பாக இதுவரை, அரியானாவின் நர்னால், கர்னால், டப்வாலி, ரேவரி, ஹோடல் (எஸ்சி), கல்கா, பானிபட் நகரம், இந்திரி, பட்கல், பரிதாபாத் என்ஐடி, நல்வா, ரானியா, பட்டோடி (எஸ்சி), பல்வால், பல்லப்கார், பர்வாலா, உச்சனா கலன், கராவுண்டா, கோஸ்லி மற்றும் பாட்ஷாபூர் ஆகிய 20 தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரசு வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

காங்கிரசு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் 20 தொகுதிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் காங்கிரசுக்கு 57 தொகுதிகள் கிடைக்கும்.அப்படி நடக்கும்போது பாஜக ஆட்சி தகுதியிழக்கும்.அரியானாவில் காங்கிரசு ஆட்சி அமையும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response