காங்கிரசுக் கூட்டணியே வெல்லும் – ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி

மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த தேர்தல் பரப்புரைப் பேரணியில் பேசிய பிரதமர் மோடி,

எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தலில் மூன்று இலக்க எண்ணிக்கையைக் கூட எட்டாது அல்லது ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பெறாது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றால், ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கொரு பிரதமரை பதவியில் அமர்த்தத் திட்டமிடுகிறது. கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் முதல் பதவியை, அம்மாவட்டத்தின் துணை முதல்வருக்கு மாற்றிக் கொடுக்க காங்கிரசுக் கட்சி திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் இராஜஸ்தானிலும் இந்த ஏற்பாட்டைத்தான் செய்திருந்தது.

கர்நாடகாவில் ஒபிசிகளின் 27 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை இணைத்த மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்க காங்கிரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரசு தலைமையிலான கூட்டணி சமூக நீதியைக் கொலை செய்ய சபதமெடுத்துள்ளது. காங்கிரசு தனது சமரச மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக மிகவும் தாழ்வாக இறங்கியுள்ளது. காங்கிரசுக் கட்சி அரசியல் அமைப்பை மாற்ற முயற்சிக்கிறது மற்றும் மத ரீதியிலான இடஒதுக்கீட்டுக்காக தலித்துகள், ஒபிசி இடஒதுக்கிடு பலனைத் திருட முயற்சிக்கிறது.

காங்கிரசுக் கட்சி அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இல்லாமல் அதன் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரசின் இளவரசர் உங்களின் சொத்துகளை சோதனை செய்ய விரும்புகிறார்.

காங்கிரசுக் கட்சி பரம்பரைச் சொத்து வரியை அமல்படுத்த விரும்புகிறது. அதன்மூலம் மக்களின் பரம்பரைச் சொத்தை திருட முயற்சிக்கிறது. அப்படிபட்டவர்கள் அதிகாரத்துக்கு வர சிறுவாய்ப்பு கூட அளிக்கக் கூடாது.

கோலாப்பூர் கால்பந்து விளையாட்டின் மையமாக அறியப்படுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், என்டிஏ கூட்டணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது என்று நான் கூறுவேன். நாட்டுக்கெதிரான கொள்கை, வெறுப்பு அரசியல் காரணமாக இண்டியா கூட்டணி இரண்டு சுய கோல்களைப் போட்டுள்ளன. மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் வாக்களார்கள் அத்தகைய கோல்களை அடிப்பார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகளிலும் இண்டியா கூட்டணி நிச்சயம் தோல்வியடையும்.

காங்கிரசுக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவரப்படும், பொது சிவில் சட்டம் இரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியுமா? அப்படி யாராவது மாற்றினால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியுமா?

இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

காங்கிரசு வெல்லாது என்று கூறும் மோடி அடுத்த வரியிலேயே அது ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு ஒரு பிரதமரை பதவியில் அமர்த்தத் திட்டமிடுகிறது என்று சொல்லியிருக்கிறார்.இதன்மூலம் காங்கிரசுக் கூட்டணி வென்று ஆட்சியமைக்கும் என்பதை அவரே ஒப்புக்கொண்டார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response