தோல்வி உறுதி என்பதால் ரிசர்வ் வங்கியைச் சூறையாடிய மோடி அரசு – அதிர்ச்சித் தகவல்கள்

இந்திய ரிசர்வ் வங்கி 1935ல் தொடங்கப்பட்டது. 1949 இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே நாட்டின் கருவூலம் ஆகும்.இவ்வங்கி நாட்டின் செலாவணிக்குரிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடுகிறது.
இந்திய நாட்டின் நாணய மதிப்பு ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

இவற்றோடு, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு, பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பொறுப்பு என முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட நாட்டின் முதுகெலும்பு எனச் சொல்லப்படும் ரிசர்வ் வங்கியையும் திவால் நிலைக்குத் தள்ளியிருக்கிறது மோடி அரசு.

மக்களவைத் தேர்தல் காலத்தில் கூட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1.65 இலட்சம் கோடியை ஒன்றிய அரசு பெற்று இருக்கிறது. இதனால் ​​ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தற்போது ரூ.30,000 கோடியாகச் சரிந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியும் திவால் நிலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியைத்தான் ஒன்றிய அரசுக்கு வழங்கி வந்தது. ஆனால் மோடி அரசு வந்தபிறகு அதுவும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒட்டுமொத்த ரிசர்வ் வங்கி இலாபம் மற்றும் உபரி நிதியை ஒன்றிய அரசு பெற்று வந்துள்ளது.

2014 முதல் 2024 வரை கிட்டத்தட்ட ரூ.9 இலட்சம் கோடி நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மோடி அரசு வலுக்கட்டாயமாகப் பெற்று இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

2014 க்கு முன், எந்த அரசும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ‘உபரி பணம் – மொத்த இலாபம்’ முழுவதையும் எடுத்ததில்லை என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.ஒரு பகுதியை மட்டும் அரசுக்கு ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி கொடுத்து வந்தது.

ஆனால் இப்போது அத்தனையும் தலைகீழ். வருடாவருடம் வரும் வருமானத்தையும், உபரி நிதியையும் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் தான் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு வெறும் ரூ.30 ஆயிரம் கோடிக்குள் சுருங்கி திவால் நிலைக்கு வந்து இருக்கிறது.

2018 ஆம் ஆண்டு, உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, ​​மோடி அரசு அனைத்து இலாப பணத்தையும் கொடுக்கும்படி ரிசர்வ் வங்கியிடம் கேட்டது. இருப்பினும், விதிகளின்படி உர்ஜித் படேல் ஒன்றிய அரசுக்குப் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

மோடி கேட்டும் பணம் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்? பல்வேறு அழுத்தம் காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். அதற்கு என்ன காரணம் என்று அவரும் சொல்லவில்லை. ஒன்றிய அரசும் தெரிவிக்கவில்லை. இது மோடி ஆட்சியின் வழக்கம் தானே?.

உர்ஜித் படேல் ராஜினாமாவுக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இந்தக் குழு ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் அத்தனையையும் மாற்றி அமைத்தது. தன்னாட்சி அதிகாரத்தை ஒடுக்கியது. மேலும் ஒன்றிய அரசு கேட்கும் போதெல்லாம் நிதி கொடுக்க வழிவகை செய்தது.

அதாவது மோடி உத்தரவுக்கு ஏற்ப அத்தனை சட்டதிட்டங்களும் உடனே பிமல் ஜலான் தலைமையிலான குழுவால் மாற்றி அமைக்கப்பட்டதால் இன்று ரிசர்வ் வங்கியின் மொத்த வருமானமும், கையிருப்பும் ஒன்றிய அரசுக்குக் கொண்டு செல்ல வழி வகுத்துள்ளது.

இந்த அரசு தனக்கென ரிசர்வ் வங்கியின் விதிகளை மட்டும் மாற்றியமைக்காமல் கார்ப்பரேட் மற்றும் நிறுவனங்களுக்காக அனைத்துச் சட்டங்களையும் மாற்றிவிட்டது. இதனால் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் நிறுவனங்கள் திவாலாகின. வங்கிகள் கடனில் மூழ்கின. அதே சமயம் 70 ஆயிரம் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு புதிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதான் மோடி அரசின் பொருளாதார தந்திரம். இன்றைக்கு ரிசர்வ் வங்கிக்கு எதிர்பார்த்த ரூ.74 ஆயிரம் கோடி இலாபம் கிடைக்காமல், இருந்திருந்தால் வங்கிகள் நிலை என்ன ஆகியிருக்கும்?. மூழ்கும் வங்கிகளை யார் காப்பாற்றுவது? லட்சுமி விலாஸ், யெஸ் வங்கி, டிஎச்எப்எல் போன்ற வங்கிகள் நிலைதான் அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டு இருக்கும். லட்சுமி விலாஸ் சிங்கப்பூர் வங்கிக்கு விற்கப்பட்டது. மற்ற இரண்டு வங்கிகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருந்தால், அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் கேள்வி கேட்க வேண்டும் என்கிறது அரசியல் சாசன விதி. மேலும் ரிசர்வ் வங்கியும் உரிய பதிலை அளிக்க வேண்டும்.

ஆனால், கடந்த 6 மாதங்களாக, பணவீக்கக் குறியீடு உயர்ந்து வந்தாலும், அரசு கேள்வி கேட்கவில்லை, ரிசர்வ் வங்கி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் மோடி அரசு எதையும் செய்யவில்லை.

இன்றைய ரிசர்வ் வங்கி ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு பணவீக்கத்திற்கு யார் பொறுப்பு கூற முடியும்?. உர்ஜித் படேலுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் சொல்வாரா? அப்படி அவர் சொன்னால் அவருக்கும் உர்ஜித் படேல் கதிதான்.

இது ஏன், எப்படி நடந்தது? ஏன் இதைப்பற்றி மக்களோ அல்லது ஊடகங்களோ எந்தவித விவாதத்தையும் மேற்கொள்ளவில்லை என்றால் நாட்டின் வளர்ச்சியை விட, பொருளாதாரத்தை விட வேறுசில விசயங்களில் மக்களின் கவனத்தை அழகாக மோடி அரசு திசைதிருப்பியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

எந்த ஒரு பொருளாதார விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தால் கச்சத்தீவு பற்றியும், வடமாநிலங்களுக்குச் சென்றால் இராமர் கோயில் திறப்பு விழா பற்றியும் மட்டுமே மோடி பேசி வருகிறார். இதே போல் பேசிப் பேசித் தான் நாட்டின் அத்தனை வளங்களும் மோடி அரசால் சூறையாடப்பட்டு வருகின்றன.

மோடி ஆட்சியின் இந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டின் கடன் தொகை ரூ.170 இலட்சம் கோடி உயர்ந்து இருக்கிறது.நாடு விடுதலை அடைந்தது முதல் மன்மோகன்சிங் ஆட்சிக் காலம் வரை, அதாவது 2014 ஆம் ஆண்டு வரை நாட்டின் மொத்தக் கடன் ரூ.55 இலட்சம் கோடி தான். ஆனால் இன்று நாட்டின் மொத்தக் கடன் தொகை ரூ.225 இலட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த
நிதி விவரம்…

2009 ரூ.25,009 கோடி
2010 ரூ.18,756 கோடி
2011 ரூ.15,009 கோடி
2012 ரூ.16,010 கோடி
2013 ரூ.33,110 கோடி
2014 ரூ.52,679 கோடி
2015 ரூ.65,896 கோடி
2016 ரூ.65,876 கோடி
2017 ரூ.30,659 கோடி
2018 ரூ.50,000 கோடி
2019 ரூ.1,76,051 கோடி
2020 ரூ.57,128 கோடி
2021 ரூ.99,122 கோடி
2022 ரூ.30,307 கோடி
2023 ரூ.87,416 கோடி
2024 ரூ.1,65,000கோடி

இந்தமுறை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த மோடியும் பாஜகவும் நாட்டின் முதுகெலும்பையே உடைத்துப்போட்டிருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்றால் அவர்களுக்கு இதைச் சரிசெய்வது பெரிய சவாலாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response