
ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் போராட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
ஜெயலலிதா மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில், அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத வகையில் உள்ளது.
எனவே அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமமுக தனது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில் தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் உடன் இணைந்து டிடிவி.தினகரன் பங்கேற்க உள்ளார். தமிழகம் முழுவதும் அமமுக தொண்டர்கள், இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


