தமிழக சட்டமன்றத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானம் – முழுவிவரம்

அக்டோபர் 18,2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து உரை ஆற்றினார்.

அப்போது முதலமைச்சர் பேசியதாவது……,

பேரவைத் தலைவர் அவர்களே,

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற கொள்கைக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், அன்னைத் தமிழைக் காப்பதற்காக மட்டுமல்ல; ஆதிக்க மொழித் திணிப்புக்கு எதிராக என்றும் குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதற்கு முன்பாக ஒரு முன்னுரையை வழங்க விரும்புகிறேன்.

தமிழ் காக்கச் சிறை சென்று மரணம் அடைந்த நடராசன் – தாளமுத்து தொடங்கி, தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான சிதம்பரம் இராசேந்திரன் வரையிலான தியாகிகளை இந்த நேரத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது. அத்தகைய நம் தாய் மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுமே திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. தோன்றிய காலம் முதல், இன்றுவரை தமிழ் மொழிக்கான ஒரு தனிப்பெரும் பாதுகாப்பு இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.

1938 ஆம் ஆண்டு முதல், இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கச் சக்திகளும் விடுவதாக இல்லை; நாமும் விடுவதாக இல்லை. இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்; தொடரவே செய்வோம் என்று இந்தப் பேரவையின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசானது, இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி, கல்வி மூலமாகத் திணிப்பதுவரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பது மட்டும்தான் என்று நினைக்கிறார்கள்.

“ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே தேர்வு – ஒரே உணவு – ஒரே பண்பாடு” – என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து, மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியா என்பது, பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் நாடு, இந்தியா. வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம். விடுதலை பெற்ற இந்தியா, ஓராண்டுகூட ஒற்றுமையாக இருக்காது என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதிய நிலையில், நமது பன்முகத் தன்மையைக் காப்பதன் மூலமாக இந்தியா எழுபத்தைந்து ஆண்டுகளாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது.

பல்வேறு மொழியினர் வாழும் நாடு இது. ஆனாலும் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டதால் அனைத்து மொழியினரும் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள். பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் இருந்தாலும், இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழி பேசுபவர்களின் நாடாக இருந்தாலும், ஒரு மொழியின் ஆதிக்கம் இருக்காது என்பதை, இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்கள் உறுதிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

‘இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படாது. விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும்’ என்று பிரதமர் நேரு அளித்த உறுதிமொழிதான் இன்றுவரை இந்தி பேசாத பெரும்பான்மை மக்களைக் காக்கும் அரணாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக ஐந்தாண்டுத் திட்டங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் அமைக்கப்பட்டன. இப்படி நடந்ததால்தான், எல்லையால் மட்டுமல்ல; எண்ணங்களாலும் ஒற்றுமை கொண்ட நாடாக இந்திய நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் அண்மைக் காலமாக நடந்து வருகின்றன. இதில் மிகமிக முக்கியமானது, இந்தி மொழித் திணிப்பு! இந்திமொழித் திணிப்பை பட்டவர்த்தனமாக ஒன்றிய பா.ஐ.க. அரசு செய்கிறது. இந்திமொழி தினம் கொண்டாடும் ஒன்றிய அரசு, மற்ற மாநில மொழிகளின் தினம் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் என்பது, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமில்லை; அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இந்தியை ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக மட்டுமல்ல; அதிகாரம் செலுத்தும் மொழியாகவும் பா.ஜ.க. அரசு உயர்த்திக் கொண்டு இருக்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக அதனை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியும், ஆங்கிலமும்தான் அலுவல்மொழியாக இத்தனைகாலம் இருந்துவரும் நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு.

இந்த வரிசையில் கடந்த 13 ஆம் நாளன்று, ஆங்கில ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி உள்ளன. அவை நமக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது, குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அச்செய்தி கூறுகிறது.

நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக்கழகங்களில், கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்திமொழி அறிவை உறுதிசெய்ய வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், கடிதங்கள் போன்றவை இந்திமொழியில் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்கள் என்று செய்திகள் மூலமாக தெரிய வருகிறது. முழுக்க முழுக்க இந்தியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் அறிக்கையாக இது அமைந்துள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில் இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் ஐ.ஐ.டி. வரை இந்தி மட்டும்தான் என்றால், மற்ற மொழி மக்களுக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள்.

ஆங்கிலத்தை முற்றிலுமாக தடுப்பதன் மூலமாக, ஆங்கில அறிவையே முற்றிலுமாகத் தடுக்கிறார்கள். மாநில மொழி என்று ஒப்புக்காகச் சொல்கிறார்களே தவிர, முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம்.

மாநில மொழிகள் மீது இவர்கள் இவ்வளவு பற்று வைத்திருப்பது உண்மையானால், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்கத் தயாரா? என்று நான் இந்த நேரத்தில் கேட்க விரும்புகிறேன்.

அனைத்துத் தேர்வுகளிலும் கட்டாய ஆங்கிலமொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிடச் சொல்வதன் மூலமாக, அனைத்து இந்தியத் தேர்வுகளையும் இந்திமயமாக்கத் துடிக்கிறார்கள் என்பதே தெரிகிறது. இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசுப் பணி பெறமுடியாத வகையில் இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்று கருதவேண்டி உள்ளது. இனி நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் இந்தியில்தான் என்று சொல்வதன் மூலமாக, இந்தி பேசும் மாநில மக்களுக்கு மட்டும்தான் இனி அனைத்திந்திய பணி இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.

“பணியாளர் தேர்வுகளுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களில் ஆங்கில மொழியை அறவே நீக்கிவிட்டு, இந்திமொழியில்தான் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்” என்று இக்குழுவின் துணைத் தலைவரான பார்த்ருஹரி கூறியிருக்கிறார். இது எங்கே போய் முடியும் என்றால், இந்தி பேசாத மாநில மக்களை மொத்தமாக தேசிய நீரோட்டத்திலிருந்து அந்நியமாக்குவதில் போய்தான் முடியும். ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான்.

முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் தன்னிடம் சொன்னதாக தலைவர் கலைஞர் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவார். “சட்டமன்றத்தில் ஆங்கிலத்துக்கு எதிராக சிலர் பேசியபோது, முதலமைச்சர் காமராசர் எங்களிடம் காதில் இரகசியம் போலச் சொன்னார். ‘ஆங்கிலத்தை எதிர்த்தீங்கன்னா, அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்னேன்’ என்று சொன்னார். எவ்வளவு பெரிய அரசியல் பாடத்தை அவ்வளவு எளிமையாகக் காமராசர் சொன்னார்கள் பார்த்தீர்களா?” என்று தலைவர் கலைஞர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு ஆங்கிலத்தை அகற்றுவதற்குப் பின்னால் இந்தியைக் கொண்டு வந்து உட்கார வைக்கும் மறைமுகத் திட்டம்தான் இருக்கிறது என்பதை இம்மாமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

1968, 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதனடிப்படையிலான விதிகளின்படி ஒன்றிய அரசுப் பணிகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய ஆங்கிலத்தை அகற்றுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்? தற்போதைய நிலையில், அறிவியல் வளர்ச்சியையும் தொழில்நுட்ப வசதிகளையும் கவனத்தில் கொண்டு, எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்திக்கு இணையான அலுவல் மொழியாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ஆங்கிலத்தையும் நீக்கிவிட்டு, இந்தியை மட்டும் வைப்பது அரசியல் சட்டத்தை மதிக்காத தன்மையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, அந்த மொழிகளை இந்திய நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட முயற்சிகள் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இந்திமயமாக்குவது சரியா? என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி!

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்பது, தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை! தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும். மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக வேண்டும். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி எந்த வகையிலும் திணிக்கப்படக் கூடாது. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாதகமான வழிவகைகள் செய்யப்படக் கூடாது. அது நம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும்.

தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இவைதான் நமது மொழிக் கொள்கை! இந்தித் திணிப்பை எதிர்ப்பதும், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதும் இதனால்தான் என்பதை இந்த மாமன்றமும், தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

இந்தி மொழி பயன்பாடு அடிப்படையில் இந்தியாவை இவர்கள் மூன்றாகப் பிரிக்கப் பார்க்கிறார்கள். இந்தி மொழி பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்கள், இந்தி மொழி பயன்பாடு குறைவான மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்று மூன்றாக இந்தியாவைப் பிரிக்கிறார்கள். நாம் மூன்றாவதாக இருக்கிறோம். ஆனால், பெரும் மொழி மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்களாகிய நம்மை மூன்றாம்தர குடிமக்களாக நம்மை ஆக்கிவிடப் பார்க்கும் முயற்சிகளுக்கு நாம் எதிர்க்குரல் எழுப்பிட வேண்டும்.

இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்:

அரசினர் தனித் தீர்மானம் :-

“ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

அந்தப் பரிந்துரைகளில்,

• ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்;

• இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும்;

• இளைஞர்களின் வேலைவாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இப்படி ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது, நடைமுறைபடுத்தக் கூடாது என பிரதமர் அவர்களுக்கு 16-10-2022 அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் அவையில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9-9-2022 அன்று குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.”

பேரவையில் இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் அதே உணர்வுடன், இந்தத் தீர்மானத்தைத் தற்போது முன்மொழிந்துள்ளேன். உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டு அமர்கிறேன்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Response