இந்தியாவுக்கு இது அவமானமில்லையா? – டிடிவி.தினகரன் கடும் தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த நாகமணி என்பவருக்குச் சொந்தமான படகில் கடலுக்குச் சென்ற நாகமுத்து, பன்னீர்செல்வம், இராஜேந்திரன் ஆகிய மூன்று பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

இதன்பின்னர், அவர்களிடமிருந்த 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட ஒரு இலட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றனர். காயமடைந்த மீனவர்கள் 3 பேரும், சக மீனவர்கள் உதவியுடன் கரை திரும்பிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்திற்குப் பிறகு, மீண்டும் அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், அவர்களிடமிருந்த வலைகளை அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். கடந்த 24 மணிநேரத்தில் 11 மீனவர்கள் மீது அடுத்தடுத்து கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்….

ஒரு பக்கம் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்; இன்னொருபுறம் புதிதாகக் கிளம்பியிருக்கிற இலங்கைக் கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

நம்முடைய மீனவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடத் துடிக்கிறது இலங்கை அரசு. இனியும் மத்திய – மாநில அரசுகள் மெத்தனமாக இப்பிரச்சனையைக் கையாள்வது சரியானதுதானா?

தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு வருவது இந்தியாவிற்கே அவமானமில்லையா? இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. வெறும் கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிடாமல் மத்திய அரசை வலியுறுத்தி அதனைச் செய்திட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response