கி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி

மது விலையை உயர்த்தி, பால் விலை உயர்வை ரத்து செய்து,   உற்பத்தியாளர் நலன் – உரிமை – நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டியது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:….

ஆவின் பால் விலையை திடீரென்று லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்த்துவதாக ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது – சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினரை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

மறுபரிசீலனை செய்க!

பால் ஊட்டச் சத்துணவு; ஏழை, எளிய தொழிலாளர்கள், வீட்டவர்களுக்கு காபி, டீ அருந்துதல் தவிர்க்க முடியாத அன்றாடப் பழக்கமாகிவிட்ட நிலையில், பால், முட்டை போன்றவைகளின் விலைகளை தமிழக அரசு உயர்த்தி, மக்களின் – குடும்பத் தலைவிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல், தவிர்க்கவேண்டும் – மறுபரிசீலனை செய்யவேண்டும்!

மாட்டுத் தீவனங்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலையைத் தரவேண்டாமா? என்ற கேள்வி எழலாம்.

அது மக்கள் நல அரசில் பல இலவசத் திட்டங்கள் தருவதைக் கூட குறைத்து, இவர்களுக்கு விலைக் குறைத்து, உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையைக் கூட்டி, மானியம் (Subsidy)
போன்ற உதவித் தொகை தருவதுபோல தரலாமே!

மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைக்கலாம்!

பால் விலையை ஏற்றாமல், டாஸ்மாக்கில் குடிகாரர்களுக்கு விற்கப்படும் போதை மது வகைகளுக்கு விலை ஏற்றலாம்; அத்தொகை கூடுதல் வருமானம். அதிக விலை என்பதால், டாஸ்மாக் குடிகாரர்களின் கொள்முதல் குறைந்து, குடிப்பவர்கள் அளவும் குறைந்தால், அவர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி ஆரோக்கியமானது அல்லவா! 

‘குடி குடியைக் கெடுக்கும்‘ என்று போர்டு எழுதி வைப்பது ஒரு சடங்காச்சார சங்கதி.

எனவே, மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைத்து – உற்பத்தியாளர் நலன் – உரிமை – நுகர்வோர் நலன் – உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டியது அவசியம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மதுவிலையை உயர்த்தலாம் என்று அவர் சொல்லியிருப்பதால் குடிகாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response