ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களை இணைத்து முழுநீளப்படமாக்கும் முறைக்கு அந்தாலஜி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
உலக அளவில் புழக்கத்தில் உள்ள இந்நடைமுறையில் தமிழிலும் சில படங்கள் வந்திருக்கின்றன.
ஆனால் உலகில் முதல்முயற்சியாக தமிழில் வெளியாகியிருக்கும் படம் 6 அத்தியாயம்.
ஆறு இயக்குநர்கள் இயக்கியுள்ள ஆறு படங்களை வரிசையாகத் திரையிடாமல், ஒவ்வொன்றின் கதையை முதலில் சொல்லிவிட்டு அதன் முடிவை பின்னால் சொல்வது என்னும் புது முறையில் இப்படத்தை உருவாகியிருக்கிறார்கள்.
கேபிள்சங்கர் இயக்கியுள்ள சூப்பர் ஹீரோ,
சங்கர்தியாகராஜன் இயக்கியுள்ள இனி தொடரும்,
அஜயன்பாலா இயக்கியுள்ள மிசை,
சுரேஷ் இயக்கியுள்ள அனாமிகா,
லோகேஷ் இயக்கியுள்ள சூப் பாய் சுப்பிரமணி,
ஸ்ரீதர்வெங்கடேசன் இயக்கியுள்ள சித்திரம் கொல்லுதடி
ஆகிய ஆறு படங்களின் தொகுப்புதான் 6 அத்தியாயம்.
எல்லாப்படங்களுக்குமான பொதுப்பண்பு அமானுஷ்யம்.
சூப்பர்ஹீரோ படத்தில் அமானுஷ்யம் இருக்கிறதா? இல்லையா? என்பதைப் படம் பார்க்கிறவர்களே முடிவு செய்துகொள்ளவேண்டும்.
இனி தொடரும், மிசை, சூப் பாய் சுப்பிரமணி, சித்திரம் கொல்லுதடி ஆகிய நான்கு படங்களிலும் விதவிதமாகப் பேய்கள் வருகின்றன.
அனாமிகா படத்தில் பயம்தான் பேய் என்று சொல்லுகிறார்கள்.
வழக்கமான பேய்ப்படங்கள் வரிசையில் சேரக்கூடிய கதைகளைக் கொண்டிருக்கக் கூடிய படம்.
இருந்தாலும், தொடக்கத்தில் கதையைச் சொல்லிவிட்டு முடிவை இரண்டாம் பாதியில் சொல்கிறார்கள் என்பதால் அதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பது படத்தின் பலம்.