வெற்றிகரமான நான்காவது வாரம் -பப்பரப்பாம் படம்

உருமி படத்தின் வசனகர்த்தா சசிகுமாரன் இயக்கும் படம் பப்பரப்பாம். இங்க் பென் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக வினோத் நடிக்கிறார். கதாநாயகிகளாக யாமினி, இஷாரா நடித்துள்ளனர். பப்பரப்பாம் படக் குழுவினர் தங்கள் திரைப்படத்தின் பெயர் மற்றும் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நூதன முறையில் அறிமுகப்படுத்தினர்.
இதற்கு அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது குப்பைகளை அகற்றும் திட்டத்தை. .
 
 படத்தின் இயக்குனர் முதல் துணை நடிகர்கள் வரை அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஒன்று திரண்டு நவம்பர் 23 அன்று பட்டினப்பாக்கம் முகப்பு பகுதியான முள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்து   குப்பையை அப்புறப்படுத்தினர்.  
அது மட்டுமின்றி, நவம்பர் 30ம் தேதியும், இரண்டாம் கட்டமாக பட்டினப்பாக்கம் பகுதியை சுத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்தனர். 3 ஆம் முறை,  பள்ளியையும் அதனை சுற்றியுள்ள பகுதி, அதனருகே உள்ள கோவிலின் வெளிப்புறம் மற்றும்  கல்வெட்டு ஆகிய இடங்களை சுத்தம் செய்து, பள்ளியை சுற்றி மூன்று லாரி மணல் கொட்டி, அந்த இடத்தை பள்ளி குழந்தைகள் விளையாடும் அழகிய மைதானமாக மாற்றியிருந்தனர். இப்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் படக்குழுவினர் ஈடுபாடோடு கலந்துகொண்டு சுத்தம்  செய்து வருகின்றனர்.
 
 டிசம்பர் 12 அன்று. நான்காவது வாரமாக கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதோடு பள்ளிக்கு உள்ளே ஓவியங்கள் தீட்டி குழந்தைகள் அதன்மூலம் கற்றுக்கொள்ளும் வண்ணம் சுவர்களை அலங்கரித்தனர். நடிகை இஷாராவும் கலந்துகொண்டு சுத்தப்படுத்தினார். இயக்குனர் சசிகுமாரன் கூறும்போது, சுயநலம்  கலந்த பொதுநலம் தப்பேயில்லை. இதில் நாங்கள் எங்கள் படத்தை பிரபலப்படுத்த எடுத்துக்கொண்ட வழிமுறையென்றாலும்  , இதில் கடற்கரையோரம் உள்ள மக்கள் பெரும்பாலும் விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள். தற்போது குப்பைகளை தொட்டியில் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த பொதுநலம் எங்களுக்கு சந்தோசத்தை தருகிறது. ஒரே ஒரு வாரம் செய்துவிட்டு ஓரங்கட்டியிருந்தால் இந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கமுடியாது. இது நாங்கள் தொடர்ந்து செய்வதால் அவர்களுக்கே இந்த புள்ளைங்க வந்து சுத்தப்படுத்துது, நாம குப்பை போடாமலாவது இருப்போம் என்ற எண்ணத்திற்கு வரவைத்திருக்கிறது. எங்களால் முடிந்த அளவு தொடர்ந்து செய்ய இருக்கிறோம். எங்களோடு அடுத்த வாரம் கைகோர்க்க ஒரு கல்லூரியிலிருந்து முன்னூறு மாணவர்கள் வரவிருக்கிறார்கள். இதில் ஈடுபாடுள்ளவர்கள் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response