நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு 6 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 29 கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய ஒன்றியம் முழுவதும் வரும் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க, மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டினார். இதில் 58 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொகுதி மறுவரையறையில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது.இதுதொடர்பான கோரிக்கைகள், போராட்டங்களை முன்னெடுக்கவும், மக்களிடம் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு முறையான அழைப்பை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், பல முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
மாநில முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), ரேவந்த் ரெட்டி (தெலங்கானா), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் (கர்நாடகா), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), பகவந்த் மான் (பஞ்சாப்) மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகர ராவ் (தெலங்கானா), நவீன் பட்நாயக் (ஒடிசா) ஆகியோருக்கு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பில் பாதிப்படைய வாய்ப்பு உள்ள மேற்கண்ட 7 மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ள பாஜக, காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாரத் ராஷ்டிர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் உட்பட 29 கட்சிகளின் தலைவர்களுக்கும் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது….
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்மைப் போன்ற மாநில அரசுகளின் உரிமையை நிரந்தரமாக குறைக்கக்கூடிய அச்சுறுத்தலை தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்தியாவில் 1952, 1963, 1973 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. எனினும், 1976 இல் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42 ஆவது திருத்தத்தின்படி, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்க, 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடித்ததால், 84 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வாயிலாக 2026-க்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிக்கப்படும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகக் குறியீடுகளை அடைந்த மாநிலங்களுக்கு, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், நியாயமற்ற தண்டனையாக அமைந்துவிடும்.
தவிர, இதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். நமது மாநில மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவது, மாநில வளங்களைப் பாதுகாப்பது, தேசிய அளவிலான முக்கிய முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வது ஆகிய திறன்களை குறைத்துவிடும். நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தேசிய கடமைகளை முறையாக நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்து, அந்த மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடக் கூடாது என்றுதான் எதிர்க்கிறோம்.
தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகளை மாநிலங்கள் இடையே மறுபகிர்வு செய்வது அல்லது, மொத்த எண்ணிக்கையை 800-க்கு மேல் அதிகரிப்பது ஆகிய இரண்டு சாத்தியமான அணுகுமுறைகளுடன், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் இந்த 2 அணுகுமுறையிலும் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.
எனவே, சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை வலியுறுத்த வேண்டும். அதற்கு, கூட்டு ஆலோசனை, ஒருங்கிணைந்த விவாதங்கள் அவசியம். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களது முறையான ஒப்புதல் வேண்டும். இக்குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்கவும் தங்கள் கட்சியில் இருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டும்.
இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல்கட்டமாக மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டம் நடத்த உள்ளோம். இத்தருணத்தில் தங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறேன். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கும், நாம் தனித் தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல், நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முன் முயற்சி ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுக்குப் பேரரதிர்ச்சி தரும் நிகழ்வாக அமைந்துள்ளது என்கிறார்கள்.