ஈரோடு மாவட்டம், செட்டிபாளையத்தைத் தலைமையிடமாக கொண்டு என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான என்.ராமலிங்கத்திற்குச் சொந்தமானது. என்.ராமலிங்கம், எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர்.
என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு இயக்குநர்களாக என்.ராமலிங்கத்தின் மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிறுவனத்திற்கு சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பெரிய அளவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் 2022-23 மற்றும் 2023-24 ஆம் நிதியாண்டில் தனது வருமானத்தைக் குறைத்து கணக்குக் காட்டியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2023 ஆம் நிதியாண்டை விட குறைத்து 2024 ஆம் நிதியாண்டில் கணக்குக் காட்டியதுதான் குற்றச்சாட்டு..
இதையடுத்து சனவரி 7 ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் கிளை நிறுவனங்கள், என்.ராமலிங்கம் வீடு, மகன்கள் வீடுகள், பவானி அடுத்த அம்மாபேட்டையில் ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் மர வள்ளிக் கிழங்கு அரவை (ஸ்டார்ச் மாவு) ஆலையிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
மேலும் சென்னை, கோவை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 5 நாட்களாக நடந்தது.
அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், நிறுவனத்தின் ஆண்டு வருவாய், நிகர இலாபம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், ராமலிங்கத்தின் வீடு மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள சூரியகாந்த் மற்றும் சந்திரகாந்த் ஆகியோர் அலுவலகத்தில் இருந்து, இரண்டு விதமான கணக்கு விவரங்களைப் பராமரித்து வந்ததற்கான கணினி, லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கான ஆவணங்கள், பங்கு முதலீட்டுப் பத்திரங்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
பிறகு அந்த ஆவணங்களை வைத்து நேரடியாக வைத்து ராமலிங்கம் மற்றும் அவரது 2 மகன்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவாய் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சோதனையின் இடையே கைப்பற்றிய ஆவணங்களை கணக்காய்வு செய்தனர். அதில் ஈரோடு ராமலிங்கம் தனது நிறுவனங்கள் மூலம் வாங்காத சிமென்ட், கம்பிகள் போன்ற கட்டுமானப் பொருட்களை அவரது நிறுவனத்திற்கு வாங்கியதாக சிமென்ட், கம்பிகள் சப்ளை செய்த நிறுவனங்கள் பெயரில் வாங்கியதாகக் கணக்குக் காட்டியுள்ளனர். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களான சூரியகாந்த் மற்றும் சந்திரகாந்த் ஆகியோர் பல போலி கணக்குகள் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.750 கோடி வரை வரிஏய்ப்பு செய்தது ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு இல்லாமல் ஈரோடு ராமலிங்கம் மற்றும் அவரது நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.10 கோடி ரொக்கம் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஈரோடு ராமலிங்கம் கடந்த 5 ஆண்டுகளில் தனது மகன்கள், மருமகள்கள் பெயர்களில் குவித்து வைத்துள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை தொடர்பான விவரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமானவரித்துறை சோதனை எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டுவதற்காக ஒன்றிய பாஜக அரசு செய்யும் வேலை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.எடப்பாடிபழனிச்சாமி வழிக்கு வந்தால் ஈரோடு இராமலிங்கம் வழக்கு இல்லாமல் தப்பித்துவிடுவார் இல்லையெனில் அவருக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்தான் என்றும் சொல்கின்றனர்.
அதேசமயம், இது எடப்பாடி பழனிச்சாமியின் அடிமடியில் கை வைக்கும் நிகழ்வு என்பதால் அவர் பாஜக சொல்படி கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று விவமறிந்தோர் சொல்கிறார்கள்.