பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா – பத்துநாட்கள் நடக்கிறது

கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 ஆவது தமிழ்ப்புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர்வி.ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், தாய்மொழிக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2022 ஆம் தொடங்கிய இந்தத் திருவிழா 2023 ஆம் ஆண்டைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடக்கிறது.

டிசம்பர் 29 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கன்னட எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமையா, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், முன்னாள் திமுக சமஉ கொ.வீ.நன்னன், எழுத்தாளர் என்.சொக்கன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

30 க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்தப் புத்தகத் திருவிழாவின் இறுதி நாளன்று கர்நாடகாவில் தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட 20 பேருக்கு சிறந்த ஆளுமை விருது வழங்கப்படுகிறது.

கர்நாடகத் தமிழர்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் சி.ராசனுக்கு இந்த ஆண்டின் கர்நாடகதமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் புது முயற்சியாக பழைய புத்தகங்களை நன்கொடையாக இந்தப் புத்தகத் திருவிழாவில் கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.500 செலுத்தி 10 பழைய புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதேபோன்று, இலவச கண்பரிசோதனை முகாம், சித்த மருத்துவ முகாமும் நடக்கிறது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை அடையாளப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும் இந்தப்புத்தகத் திருவிழாவிற்குக் குடும்பம் குடும்பமாக வருமாறு நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Response