இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள், நீட் – பிஜி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இத்தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.
எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு 2024-25 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் இன்று (ஜூன் 23) நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென நீட் – முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்…
இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். சில போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த சமீபத்திய குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் முதுநிலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. நீட் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் தான் முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வை நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காங்கிரசு தலைவர் இராகுல்காந்தி கூறியதாவது….
மோடியின் கையாலாகாத அரசு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் மற்றுமோர் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு. பாஜக ஆட்சியில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் காக்க கல்வியில் கவனம் செலுத்துவதை விட, அரசுடன் போராடுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் மோடி
இவ்வாறு இராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.