திருப்பி அனுப்பிய சட்டமுன்வடிவுகள் மீண்டும் நிறைவேற்றம் – தமிழ்நாடு அதிரடி

தமிழ்நாடு ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த 10 சட்டமுன்வடிவுகளைத் திருப்பி அனுப்பினார்.ஆளுநர்.

அம்மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (நவம்பர் 18,2023) காலை கூடியது.

அவை கூடியவுடன் பேரவைத்தலைவர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர்,

மக்களாட்சித் தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. இது தொடர்பாக சட்ட ரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.

ஆனால் ஆளுநர் இரவி தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால், சட்டமுன் வடிவுகளைத் திருப்பி அனுப்பியிருப்பது, தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவர் அவமதிக்கிறார் எனப் பொருள். இது சட்டவிரோதம், மக்கள் விரோதம், ஜனநாயக விரோதம், மனசாட்சி விரோதம், அதையும்விட சட்டமன்றத்தின் இறையான்மைக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு முழுவதும் மாறாக ஆளுநர் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார்.

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று பேசினார்.

முதல்வர் பேசியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை விமர்சிக்காமல், தனிப்பட்ட விமர்சனங்களைக் கூறாமல் தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதியளித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி எஸ்.வேல்முருகன், கொமதேக ஈஸ்வரன், மமக ஜவாகிருல்லா, காங்கிரசு செல்வப் பெருந்தகை, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் முதலமைச்சரின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து அவர்கள் வெளியேறினர்.

பின்னர் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Response