முதல் தோல்வியைக் கொடுத்த இந்தியா அணி – இரசிகர்கள் கொண்டாட்டம்

நடப்பு உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் 21 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 5 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்திய மட்டைப்பந்து அணி.

இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே பெறாத நியூசிலாந்து அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 274 ஓட்டங்கள் எடுத்தது.

275 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் மற்றும் கில் கூட்டணி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இக்கூட்டணியில் கில் பொறுமையாக விளையாட ரோகித் வழக்கம் போல் அதிரடியைக் கடைபிடித்தார். அணி 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெர்குசன் பந்துவீச்சில் ரோகித் ஆட்டமிழந்தார். ரோகித் 46 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த ஐந்து ஓட்டங்கள் எடுப்பதற்குள் கில்லும் ஆட்டமிழந்தார்.அவர் எடுத்த ஓட்டங்கள் 26.

ஸ்ரேயாஷ் அய்யர் வந்த வேகத்தில் 6 பவுண்டரிகளை விளாசியவர், 33 ரன்களில் ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில், பந்துபிடிபட்டு நடையைக்கட்டினார்.

இதன்பின் விராட் கோலி – கேஎல் ராகுல் கூட்டணியைக் கட்டமைக்க முயன்றனர். அதன்படி,கூட்டணி மூலம் 50 ரன்கள் இருவரும் எடுத்திருந்தனர். அப்போது சான்டனர் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகினார் கேஎல் ராகுல். 27 ரன்களில் ராகுல் வெளியேறிய பின் வந்த சூர்யகுமார் யாதவ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்காகப் போராடினார். அவருக்கு ஜடேஜா பக்கபலமாக இருந்தார். இந்தப் போட்டியிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஜடேஜா பவுண்டரி அடிக்க, இறுதியில் 48 ஓவர்களில் 6 வீரர்கள் இழப்புக்கு இந்திய அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

நடப்பு தொடரில் இந்தியா பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும். அதேநேரம் நியூசிலாந்து பெறும் முதல் தோல்வி இது.

இவ்வெற்றியை இந்திய மட்டைப்பந்து இரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Leave a Response