வீண் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்

அண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார்.அந்த பேட்டியில் வைகோ குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் கடந்து சென்றார்.இதன் காரணமாக திருமாவளவன் மீது மதிமுகவினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நேர்காணல் குறித்து திருமாவளவன் விளக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சட்டக் கல்லூரி மாணவராக இருந்த திருமாவளவன் கல்லூரிகளில் இலங்கைத் தமிழர் குறித்து ஆதரித்துப் பேசுவதற்கு என்னை அழைத்துச் சென்றவர். நேர்காணலில் திருமாவளவன் கேள்வியைக் கடந்து சென்ற விதம் தேவையற்ற, நியாயமற்ற விமர்சனம் வெளிவர ஆரம்பித்தது. இன்று சந்திக்கும் போது உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை என்று நான் தெரிவித்தேன்’’ என்றார்.

இதையடுத்து, திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தனியார் தொலைக்காட்சியில் நெறியாளர் குதர்க்கமாகக் கேட்ட கேள்விக்கு நான் பதிலளிக்காமல் சென்றது விமர்சனத்துக்குள்ளாகியது. அண்ணன் வைகோவைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும், அவர்களது உரிமைக்காகவும் மிகப் பெரிய பங்காற்றியவர் வைகோ என்பதை நாடறியும். தமிழக அரசியலில் மதிமுக மிகப் பெரிய இடத்தை அடைந்திருக்க முடியும். ஆனால் மதிமுக பின்னடவைச் சந்தித்ததற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு காரணம் என்பது வரலாறு’’

இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின் மூலம் தேவையற்ற சர்ச்சைகளுக்கு இரு தலைவர்களும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Leave a Response