இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நவம்பர் 5 இல் பரப்புரை இயக்கம் தொடங்கவிருக்கிறது. அதையொட்டி அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
தமிழர்களின் இன்னொரு தாயகமான புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்காமல், ஒன்றியப் பகுதியாகவே வைத்து வஞ்சித்து வருகிறது இந்திய அரசு! மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படாமல், இந்திய அரசின் துணைநிலை ஆளுநரும் இந்தி அதிகாரிகளும் என அயல் இனத்தாரே அதிகாரம் பெற்றுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரிக்கு தனி மாநிலத் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக மாறியுள்ளது.
“இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!” என்ற முழக்கத்தோடு, இதற்கான மாபெரும் மக்கள் பரப்புரை இயக்கத்தை வரும் நவம்பர் 5 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடங்குகிறது.
வரும் காரி (சனி)க்கிழமை – 2022 நவம்பர் 5 அன்று காலை புதுச்சேரி இராசா திரையரங்கு அருகில் நடைபெறும் இதற்கான பரப்புரைத் தொடக்க நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பரப்புரையைத் தொடங்கி வைக்கிறார். நிகழ்வுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா.வேல்சாமி தலைமை தாங்குகிறார். துணைப் பொதுச்செயலாளர் தோழர் க.அருணபாரதி தொடக்கவுரையாற்றுகிறார்.
“புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வேண்டும்! ஏன்?” என்ற பரப்புரை விளக்கக் கையேட்டை உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் ஐயா கோ.தமிழுலகன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் தோழர் இரா.மங்கையர்செல்வன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி செயலாளர் திரு. முத்.எம்.சிவக்குமார், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் திரு. இரா.முருகானந்தம், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் திரு.கோ.அழகர், மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் திரு.கோ.சுகுமாரன், நா.த.க. புதுச்சேரி பொருளாளர் தோழர் ம.செ.இளங்கோவன், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் திரு.தூ.சடகோபன், நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் தோழர் த.இரமேசு, புதுச்சேரி தமிழ் எழத்தாளர் கழகத் தலைவர் திரு.புதுவைத் தமிழ்நெஞ்சன், நா.த.க. மகளிர் பாசறைச் செயலாளர் திரு. பா.கௌரி, த.தே.பே.காரைக்கால் செயலாளர் தோழர் செ.சூர்யா ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். நிறைவில், த.தே.பே. புதுச்சேரி வடக்குக் கிளைச் செயலாளர் தோழர் தே.சத்தியமூர்த்தி நன்றி கூறுகிறார்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், புதுச்சேரி வாழ் தமிழ் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.