தொடர்ந்து சமையல் எரிவாயு உருளை விலையை ஒன்றிய அரசு உயர்த்திவருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சித்தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உலக சந்தையில் எரிவாயு விலை குறையும்போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்? என ஒன்றிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்….
சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை ரூ.1000 ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல. சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.710 ஆக இருந்த உருளை விலை இதுவரை ரூ.358 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 50.44% உயர்வு ஆகும். இவ்வளவு விலை உயர்வை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
உலகச் சந்தையில் சமையல் எரிவாயு விலை உயரவில்லை. இந்தியாவில் இன்று கூட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8.50 குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சியாகும். உலகச் சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்? விலை உயர்வை இரத்து செய்து விட்டு, மக்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.