காரைக்குடியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துறைமுகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா பேசியதாவது:
தற்போது எதற்கெடுத்தாலும் பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. குழாய் இணைப்பு பெற கூட கவுன்சிலருக்கு பணம் தர வேண்டிய நிலை உள்ளது. படி அளக்கவில்லை என்றால் குழாய் இணைப்பே இல்லாமல் இருக்க வேண்டியதுதான். இவர்கள் பணத்தை வைத்து மெத்தையா தைத்து படுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை.
ஆட்சியில் இருப்பவர்கள் சட்டபடியான செயல்களில் ஈடுபடாவிட்டால் அதனை மறுப்பதற்கான அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக ஐஏஎஸ்களை படேல் உருவாக்கினார்.
ஆனால், தற்போது ஆட்சியில் உள்ளவர்களும் அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுகின்றனர். இது பெரும் தீமை. அதிகாரிகள் கையெழுத்து போடுவதால்தான் ஒப்பந்ததாரர்கள் மந்திரிகளுக்கு கமிஷன் தருகின்றனர். 40% வரை இப்போது கமிஷன் வழங்க வேண்டிய நிலை உள்ளது. மோசமான சாலைகளுக்கும் அப்போதுள்ள சேர்மன், எம்எல்ஏ, எம்பி பெயர்களை வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.