சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியதால் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார்.அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை ஒன்று மதுரைக்கு இருந்தது. அதற்குள் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருநெல்வேலியில் தனது உறவினருக்குச் சொந்தமான இடத்தில் தலைமறைவாகி விட்டார்.
அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் அதி தீவிரம் காட்டி அதன் காரணமாக அவர் திருநெல்வேலியிலிருந்து பிரவீன், இளங்கோ பரணி ஆகியோர் உதவியுடன் பெங்களூரிலுள்ள தனது நண்பர் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் பதுங்கி இருந்துள்ளார்.
அமைச்சருக்கு உதவிய பிரவீன் இளங்கோ ஆகிய இருவரையும் பிடித்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை 17 ஆவது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார்.
விசாரணையின்போது முதற்கட்டமாக 376 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லாது எனவும் மாற்று சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரியும் மணிகண்டனின் வழக்கறிஞர் கோரியுள்ளார். சாந்தினி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் உரிய விளக்கம் அளித்ததன் பேரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.