இரண்டு மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 191 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர். இவர்களின் எதிர்காலத்தை 73 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இன்றைய தேர்தல் நடைபெறும் தொகுதிகள், பெரும்பாலும் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வந்த இடங்களைச் சேர்ந்தவை என்பதால் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக அப்பர் அசாம் மற்றும் பிரம்மபுத்ரா நதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 தொகுதிகளில் இந்தத் தேர்தல் நடக்கிறது. இங்கு 23 பெண்கள் உள்பட 264 வேட்பாளர்களின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Response