சேரன் அமீர் சிறப்பித்த இயக்குநர் எழில்பாரதி நூல்கள் வெளியீட்டுவிழா

இயக்குநர் எழில்பாரதி எழுதிய செம்பீரா – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ஆயுதம் வைத்திருப்பவன் கவிதைகள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா அரங்கில் நேற்று மாலை நடந்தது.

முனைவர் பூ.சீனிவாசன் வரவேற்றுப் பேசினார். பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன் விழாவைத் தொகுத்து வழங்கினார். த.மு.எ.க.ச.,வின் வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் ராஜசங்கீதன், இயக்குநர்கள் ரமேஷ் பாலகிருஷ்ணன், விருமாண்டி, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் சேரன் நூல்களை வெளியிட இயக்குநர் அமீர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சேரன், “எதிர் கருத்துகளே வெற்றிப்பட சினிமாக்களை உருவாக்கும்..” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும்போது எதிர்கருத்துள்ள உதவி இயக்குநர்களை தன்னைச் சுற்றி வைத்திருக்கும் இயக்குநர் மட்டுமே ஒரு நல்ல திரைப்படத்தை, வெற்றிப் படைப்புகளை உருவாக்க முடியும் என்றார்.

நூல்களைப் பெற்றுக் கொண்டு பேசிய இயக்குநர் அமீர், “பாசிச, மக்கள் விரோத அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் இங்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதாவது எழுத்தாயுதங்களை உருவாக்கித் தரும் படைப்பாளிகள் தேவைப்படுகின்றனர். கவிஞர்கள், எழுத்தாளர்களின் தலையாயப் பணி காதலை எழுதுவதை விட, சமூகப் பிரச்னைகளை எழுதுவது தான். போராட்டங்களே மக்கள் விரோத அரசுகளை அகற்றும். அப்போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டியது, முழக்கங்கள் தான். அம்முழக்கங்களை உருவாக்க வேண்டியது, கவிஞர்கள் தான். அது காலத்தின் தேவை,” என்று கூறினார்.

பதிப்பாளர் ஜீவா படைப்பகம் கார்த்திக் புகழேந்தி நன்றி கூறினார்.

Leave a Response