கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதன்படி, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அந்தத் தேர்வு நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவதோடு, இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதத்தில் நடக்கும் என்றும், இரத்து செய்யப்படலாம் என்றும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
இதனால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்தநிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது?
பதில்:- 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதன்பிறகு இருக்கும் நிலைமையை பொறுத்து, இறுதி முடிவை முதலமைச்சர் தான் தெரிவிப்பார். பள்ளிக்கல்வி துறை தயார்நிலையில் தான் இருக்கிறது.
கேள்வி:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை இரத்து செய்தால், என்ன விளைவு ஏற்படும்?
பதில்:- இரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 10 ஆம் வகுப்பு தேர்வை மாணவ மாணவியர்கள் எழுத வேண்டியது அவசியம். ஏனெனில், 10 ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான தேர்வாகும். அதனால் தேர்வு எப்பொழுது என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும்.
என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.