கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.
இதனால் கும்பகோணம் நகரமே முடங்கி கிடக்கிறது. எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் சாலைகள் பல வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
காலை, மாலை 2 வேளை நடைப்பயிற்சிக்காக வெளியே சென்று வந்த முதியவர்களும் தற்போது வீட்டிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி உள்ளது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் முதியவர்கள், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ள பொதுமக்கள் மருந்துப் பொருட்களை வாங்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கும்பகோணம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஒரு குழு அமைத்து நோயாளிகள் மற்றும் வெளியே வரமுடியாத நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இந்தச் செயல் பொதுமக்களிடையே வரவேற்புப் பெற்றதைத் தொடர்ந்து இந்தக் குழுவினருக்கு ஏராளமானோர் தங்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுக்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சேவை தற்போது வாட்ஸ்-அப் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்தால் வேண்டிய மருந்து வீடு தேடி வரும் வகையில் காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து துணைக் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..
உடல் நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருப்பவர்களால் இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை. அவர்கள் வெளியே வந்தாலும் தங்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வாங்க முடியவில்லை. எந்த மருந்துக் கடையில் எந்த மருந்து கிடைக்கிறது? என்ற தகவல் அவர்களுக்குத் தெரியவில்லை.
அதுபோன்ற நபர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த வாட்ஸ்- அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்-அப் எண்கள் 9791722688, 6383108227 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மருந்துப் பொருட்கள் குறித்த தகவலை தெரிவித்தால் காவல்துறையினர் வீடு தேடிச்சென்று மருந்தைக் கொடுத்து அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
இந்தச் சேவை ஊரடங்கு அமலில் உள்ள நாள் வரை நடைமுறையில் இருக்கும். சமூக இடைவெளியைப் பின்பற்றி, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசின் அறிவிப்பை மக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தச் சேவை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம் காவல்துறையின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.