கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து புதுச்சேரியில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கக் கோரி பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
இதுபற்றி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கடந்த 24 ஆம் தேதி நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன மாணவ மாணவியர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.