உதயநிதி திரைப்பட நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார். திமுக என்கிற மிகப்பெரிய கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், அவர் குறித்து அவதூறு செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன.
சிலநாட்களுக்கு முன்புவரை, நடிகை ஆண்ட்ரியா, சூசகமாகச் சொன்ன ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு உதயநிதி மேல் குற்றம் சாட்டப்பட்டது.
சிலநாட்கள் பேசப்பட்ட அந்தச் செய்தி ஓய்ந்துபோனது.
இப்போது சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி,உதயநிதி குறித்து ஒரு செய்தியை வெளியிட்டு,அதுகுறித்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவேன் என்று சொல்லியிருக்கிறார்.
உதயநிதி நடிகராகவும் தொடர்வதால் நடிகைகளுடன் இணைத்துப் பேசப்பட்டால் அது உண்மை போலவே இருக்கும் என்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இம்மாதிரி செய்திகள் வருகிறதோ? என்கிற ஐயம் ஏற்படுகிறது.
அதேசமயம், இதுபோன்ற செய்திகளை அன்றாடம் வெளியிட்டு இதை வெகுசன விவாதப் பொருளாக மாற்றிவிட்டால், பொருளாதார சீரழிவு போன்ற அடிப்படைச் சிக்கல்களிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடலாம் என்கிற ஆளூம்கட்சியின் கருத்தின்படி இவை நடக்கின்றன என்கிறார்கள்.
இக்கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜகதான் இப்படி நடிகைகளை விலைக்கு வாங்கி உதயநிதி மேல் அவதூறு பரப்ப வைக்கிறது, நீங்கள் நன்றாகக் கவனியுங்கள் ஆளும் பாஜக மேலோ அதிமுக மேலோ சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளை விட திமுக மேல்தான் அதிக அளவில் குற்றச்சாட்டுகள் வருகின்றன என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.
இந்த வியூகங்களை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது?