அமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா?

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா அண்மையில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான்.

எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா,

நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம்.ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன என்றார்.

அமித்ஷாவின் இந்தக் கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டிவிட்டர் பக்கத்தில்,

கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவரின் கருத்துக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த முதலைமைச்சரே கருத்துத் தெரிவித்திருப்பதால் பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது.

அதோடு பாஜகவில் உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் அமித்ஷா அணி மோடி அணி என் இரண்டு அணிகள் உருவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response