வருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம் புதுவைக்கு பலத்த மழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாகப் பெய்து வருகிறது. சில தென் மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இதுவரை மழை இல்லை. ஆனால் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையானது தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும்.

அடுத்த 48 மணி நேரத்தில் அது புயலாக மாறும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் புயல் 30 ஆம் தேதி தமிழகப் பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், கரையைக் கடக்கும் போது தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கேரள மற்றும் கர்நாடக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் மேற்குக் கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது,

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும். தமிழகக் கரையை நோக்கி புயல் நகரக் கூடும். 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புகளால் தமிழகத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கஜா உட்பட அண்மைய புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாக இப்போது என்ன நடக்குமோ? என்கிற பதட்டம்தாம் இது என்கிறார்கள்.

Leave a Response