கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நேற்றுக் காலையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் 228 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளை இலக்கு வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் 8 இடங்களில் இந்தத் தாக்குதல்களை நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்களில் 32 பேர் வெளிநாட்டவர்கள். மூவர் பொலிஸார். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யேசுவின் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கிறிஸ்தவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது தேவாலயங்களில் தற்கொலையாளிகள் தாக்குதலை நடத்தினர் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றனர்.
மிக மோசமான இந்தத் தாக்குதல்களால் தேவாலயங்கள் கொலைக் களங்களாகக் காட்சியளித்தன. இறந்தவர்களின் உடல்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. கூரை ஓடுகள் நொறுங்கி வீழ்ந்திருந்தன. காயமடைந்தவர்களினதும் ஏனையவர்களினதும் ஓலங்களால் அந்த இடங்கள் நிரம்பிக்கிடந்தன.
மேலும் 3 தாக்குதல்கள் நட்சத்திர உல்லாச விடுதிகளில் இடம்பெற்றது. அவற்றில் ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதைப் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
மற்றொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மூன்றாவது விடுதியில் இடம்பெற்றது தற்கொலைத் தாக்குதலா அல்லது குண்டுத் தாக்குதலா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்கொலைத் தாக்குதல்கள் உட்படக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவும் பொலிஸ் பேச்சாளரும் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினர்.
தாக்குதலை நடத்தியோர் குறித்து பொலிஸாரோ, ஆட்சியாளர்களோ, படைத்துறையினரோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. எனினும் ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாத அமைப்பின் இலங்கை உறுப்பினர்களே இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று பொலிஸ் மா அதிபர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தாக்குதல் தொடர்பில் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அதிலேயே பொலிஸ் மா அதிபர் இந்தத் தகவலைத் தெரிவித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
நீர்கொழும்பில் முதல் தாக்குதல்
நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் காலை 8.45 மணியளவில் முதல் தாக்குதல் இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பெரும் ஓசையுடன் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அந்த இடமே அதிர்வுக்குள்ளாகி தாம் தூக்கி வீசப்பட்டனர் என்றும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.
வீழ்ந்து கிடந்த தம் மீது பொல பொல வென கூரை ஓடுகளும் பாரமான வேறு பொருள்களும் வீழ்ந்தன என்றும் அவர்கள் கூறினர். கதிகலங்கிப்போன மக்கள் கூட்டம் கூச்சலிட்டவாறு தேவாலயத்திலிருந்து தப்பி வெளியேற முண்டியடித்தபோது பலரது உடல்கள் அங்கே வீழ்ந்து கிடப்பதையும் பல உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதையும் தாங்கள் கண்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குண்டுகள் நிரம்பிய பொதியை எடுத்து வந்த ஒருவர்அதனைத் தேவாலயத்தின் உள்ளே வெடிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தத் திடீர் குண்டுவெடிப்பால் ஆலயத்தின் இருக்கைகள், கூரைகள் என்பன சுக்கு நூறாக வெடித்துச் சிதறின.
ஆலயத்தின் சொரூபங்களும் நொருங்கின. நொடிப் பொழுதில் எல்லாவமும் முடிந்து விட்டது என்கின்றனர் அங்கிருந்தவர்கள். இந்தத் தாக்குதலில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 105 பேரின் சடலங்கள் நீர்கொழும்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. 7 பேரின் சடலங்கள் ராகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
கொச்சிக்கடை
நீர்கொழும்பில் தாக்குதல் இடம்பெற்ற சிறிதுநேரத்தில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரண்டாவது குண்டு வெடித்தது. பூசை வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, ஆலயத்தினுள் ஓடி வந்த தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்தார் என்று அங்கு பூசை மேற்கொண்ட மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் தாக்குதலால் ஆலயம் நிலைகுலைந்ததுடன் பெரும் கரும்புகை அந்தப் பகுதியில் வெளிக்கிளம்பியது. மக்கள் பதறியடித்து வெளியில் ஓடினர். காயமடைந்தவர்களை நோயாளர் காவுவண்டிகளில் ஏற்றிச் சென்றனர். கொழும்பு நகர வீதிகள் எங்கும் நோயாளர் காவு வண்டியின் ஓசைகளே கேட்டுக் கொண்டிருந்தன.
போர்க் காலங்களில் இருந்ததைப் போன்ற பதற்றம் கொழும்பு நகர் எங்கும் பரவியிருந்தது. மக்கள் அச்சத்தில் மூழ்கியிருந்தனர். இந்தத் தாக்குதலில் 70 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் அமைந்துள்ள சியோன் தேவாலயத்தில் காலை 9 மணிக்கு அடுத்த குண்டுவெடித்தது. தற்கொலைதாரி என்று நம்பப்படும் நபர் ஒருவர் ஆலயத்தினுள் புகுந்து ‘உமர்’ என்று கத்தியவாறு குண்டை வெடிக்க வைத்தார் என்று தாக்குதலில் தப்பிய ஒருவர் குறிப்பிட்டார்.
குறித்த நபர், ஆலய வழிபாடு எத்தனை மணிக்கு ஆரம்பமாகும் என்ற விவரங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது. சில நிமிட நேரங்களில் நேர்ந்த இந்தப் பேரிடர் காரணமாக வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்தனர்.
உல்லாச விடுதிகளும் இலக்கு
கொழும்பு நகரிலுள்ள முக்கிய நட்சத்திர உல்விலாச விடுதிகளான சங்கரில்லா, சினமன், கிங்ஸ்பெரி ஆகியவற்றிலும் சமநேரத்தில் குண்டுகள் வெடித்துள்ளன. சி4 ரகத்தைச் சேர்ந்த 25 கிலோ வெடிபொருள்களை, ஹோட்டல்களின் வரவேற்பு அறை, வராந்தாவில் வைத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டல்களில் பெரும் சத்தத்துடன் அவை வெடித்துள்ளன. ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
தாக்குதலாளிக் நேற்றுமுன்தினமே ஹோட்டல்களில் அறையை முற்பதிவு செய்து அங்கு தங்கியிருதனர் என்று தமது முதல் கட்ட விசாரணைகளில் அறிந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குண்டுவெடிப்புக்களை அடுத்து ஹோட்டல்களில் தங்கியிருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர்.
மாலைத் தாக்குதல்
காலையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்கள் காரணமாக நாடே அதிர்ச்சியில் மூழ்க்கியிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலைக்கு அருகிலுள்ள விடுதியில் திடீரென குண்டு வெடித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர். தற்கொலைத்தாரி குண்டை வெடிக்க வைத்தார் எனப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. தாக்குதலாளிகள் என்று சந்தேகிக்கப்படுவர்களை தெமட்டகொடவில் இருந்த ஒரு வீட்டில் கைது செய்யச்சென்றபோது, அவர்கள் குண்டுவெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்.இதில் பொலிஸாரும் உயிரிழந்தனர் என்று கூறப்படுகின்றது.
கூட்டம்
இந்தத் திடீர் தாக்குதல்களைத் தொடர்ந்து உயர்மட்டக் கூட்டம் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலையைமில் அலரிமாளிகையில் நேற்று இரவு இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, சபாநாயகர் கரு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததாவது: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விளக்கமளித்தார். இந்தத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பே மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று கூறினார். தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். தாக்குதல் நடத்திய குழுவின் வலைப் பின்னலைத் தாம் கண்டுபிடித்துள்ளனர் என்றும் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார்
இவ்வாறு உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.