காலா படத்தில் சீமானைக் கிண்டல் செய்து காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டது.
படம் வெளிவந்தபின் அது உறுதியாகியிருக்கிறது என்று சிலரும் அப்படி எதுவுமில்லை என்று சிலரும் சொல்கிறார்கள்.
சீமானைக் கிண்டல் செய்கிறார்கள் என்று சொல்பவர்கள் வாதம் என்ன?
படத்தில் விழித்திரு என்கிற அமைப்பை நடத்தி, போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லெனின் எனும் பெயர் கொண்ட காலாவின் மகன்களில் ஒருவர்.
அவர் எப்போதும் புரட்சி போராட்டம் என்கிறார். என் போராட்டம் வென்றிருக்கும் உன் புருஷன் கெடுத்துட்டார் என்று அம்மாவிடம் சண்டை போடுகிறார்.
அவர் செய்யும் செயல்கள் தோல்வியடைவதும் அவரே கேலிப் பொருளாவதும் நடக்கிறது.
இந்த வேடத்தை சீமானை மனதில் வைத்துத்தான் பா.ரஞ்சித் வடிவமைத்திருக்கிறார்
என்று சொல்கிறார்கள்.
அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் சொல்வது என்ன?
சீமானை மனதில் வைத்திருந்தால் ஒரு பொதுவுடைமைத் தலைவர் பெயரை வைத்திருக்கமாட்டார். தூயதமிழில் பெயர் வைத்திருக்கலாம்.
இன்னொரு மகன் வீட்டைவிட்டுப் போகிறேன் என்று சொல்லும்போது, டேய் அவனப் பாருடா புரட்சி போராட்டம்னு போனாலும் இந்த மண் மீது அவனுக்கிருக்கிற பாசத்த நான் மதிக்கிறேன் டா என்று அவருக்கு ஆதரவாகவே பேசுகிறார்.
கடைசியில் ரஜினியைப் பாதுகாக்கும் தளபதியாகவே அவர் விளங்குகிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது அது சீமான் என்று சொல்லமுடியாது அப்படியே இருந்தாலும் அவரைச் சிறுமைப்படுத்துவதாகச் சொல்ல முடியாது என்கிறார்கள்.