காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதே கோரிக்கைக்காக ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ்த் திரையுலகினர் சார்பில் அறவழிப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள், பெப்சி தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று (மே 2, 2018) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நடிகர்கள் நாசர், விஷால், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினர்.
மேலும் இந்தச் சந்திப்பில், காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திரைத்துறை சார்பில் மனுவை வழங்கினர்.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு வெளியில் வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொன்வண்ணன் ஆகியோர் கூறியதாவது:-
காவிரிக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் திரைத்துறையினர் 5000 பேர் கையெழுத்திட்ட மனுவை கவர்னரிடம் அளித்தோம். காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.