பதவிக்காக அல்ல மக்கள்நலன்களுக்காகப் போராட தஞ்சையில் புதிய கட்சி தொடக்கம்

இந்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது பல்வேறு மக்கள் விரோத திட்டத்தையும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும், தனி மனிதனின் அடிப்படை உரிமையான உணவு, உடை, உறைவிடம் கூட இல்லாமல் தமிழர்களை சொந்த நாட்டு அகதிகளாக துரத்த மீத்தேன், நியூட்ரினோ, அணு மின்நிலையங்கள், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்துக்குள் திணிக்கிறது.

இந்த அடக்குமுறையில் இருந்து எமது மக்களையும், மண்ணையும், காத்து வருங்கால பிள்ளைகளுக்கு, எமது தமிழ் மண்ணை மனிதர்கள் வாழக்கூடிய இடமாக தரவேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கு உள்ளது.

அதன் காரணமாக இளைஞர்கள், மாணவர்கள், சமூகப் பொறுப்புள்ள பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து “தமிழர் விடியல் கட்சி”யை துவங்குகின்றோம். கட்சியின் கொடியை (தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்) தலைவர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்.

முதல்கட்டமாக காவேரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து “தமிழர் விடியல் கட்சி” (பனகல் கட்டிடம், பழைய பேருந்து நிலையம்) அருகில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

தொடர்ந்து மக்களுக்கு எதிரான மற்ற அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடி தடுத்து நிறுத்துவோம் என்று “தமிழர் விடியல் கட்சி” உறுதி ஏற்றுகொள்கிறது.

இவ்வாறு “தமிழர் விடியல் கட்சி”யின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மா.டைசன் மற்றும் உ.இளமாறன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார்திராவிடர்கழகம், விடுதலை தமிழ்ப்புலிகள்கட்சி, மேபதினேழுஇயக்கம் மற்றும் பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் ஆகிய அமைப்புகள் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மக்களுக்காகப் போராடுவதற்கென்றே தொடங்கப்படும் இந்தக்கட்சியின் நோக்கங்கள் வெற்றி பெறுவது மக்களுக்கு நல்லது.

 

Leave a Response